Friday, November 16, 2012

ஆன்ம வித்தை: பகுதி 1


ஆன்ம வித்தை

பகுதி-1

(பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி அருளிச் செய்த உபதேசப் பாடலைப் பற்றி டொராண்டோ நகரில் 2010-ல் நிகழ்த்திய உரையை அடிப்படையாக கொண்டது - அனந்த்)
 
இந்து மதத்தின் அடிப்படைக் குறிக்கோள் தன்னை அறிதல் என்னும் ஆத்ம ஞானமே. நாம் புலன்களால் உணரக்கூடிய இந்தப் பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து வகைப் படைப்புகளும் நமது புலன்களின் நுகர்ச்சிக்கும், நம் அறிவுக்கும் அப்பாற்பட்டதாகவும், காலம், இடம் ஆகியவற்றைக் கடந்ததாகவும் விளங்குகின்ற பரமாத்மா என்று கூறப்படும் பரம்பொருளின் பல்வகை வெளிப்பாடுகளே ஆகும்.

அப்பரம்பொருள் நம்மிடம் உள்ள திறன்கள் எவற்றாலும் விளக்கிட இயலாத பேருணர்வாகிய (Supreme Consciousness) விளங்கும் ஒன்று. அது, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பினுள்ளும் உள்ளுணர்வாக உறைந்து அதைச் செயல்பட வைக்கிறது. இந்த உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள நாம் வெளியுலக ஈடுபாடுகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, நமது பார்வையை உள் முகமாகச் செலுத்த வேண்டும்.

இந்த முயற்சியின் இறுதிக் கட்டத்தில், அதுவரை நம் உடல், மனம், புத்தி போன்றவற்றோடு நம்மை இணைத்துக் கொண்டிருந்ததனால் இருந்த ’நான்’ என்னும் அஹங்காரம் மறைந்து, நாம் பேருணர்வோடு ஒன்றுபடுவோம்.

அந்த நிலையே, உண்மையான இயல்பை உணர்ந்த, தன்னை அறிந்த நிலை.

அந்நிலை பரிபூரண அறிவும் அதனோடு சார்ந்த பேரின்பமும் கைகூடிய அனுபூதியாகத் திகழும். இதையே நமது வேதங்களும் உபநிஷத்துகளும் மற்ற ஆன்மிக நூல்களும் விரிவாக எடுத்துரைக்கின்றன.

இந்த ஆத்ம ஞானம், உலக வியவகாரங்களில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்துவரும் நமக்குக் கிட்டக் கூடிய ஒன்றா என்ற கேள்விக்கு, ’ஆம்’ என்ற விடையைப் பகவான் ஸ்ரீரமணரைப் போல நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிய ஞானிகளின் சரித்திரங்கள் தெளிவாக்குகின்றன.

குறிப்பாக, அண்மைக்காலம் வரை நம்மோடு வாழ்ந்த பகவான் ஸ்ரீரமணர் நம்மிடம் அவருக்கிருந்த அளவற்ற கருணையினால் நாம் எவ்வாறு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ’நான்’ என்னும் அகந்தையை ஒழித்து ஆத்ம ஞானம் அடைய இயலும் என்பதைத் தம்முடைய வாழ்க்கை முறையாலும் பல்வேறு வகையான அறிவுரைகளாலும் விளக்கியுள்ளார்.  

அவருடைய உபதேச சாரம், அருணாசல அக்ஷர மணிமாலை போன்ற படைப்புகளைக் கேட்டும் படித்தும் தங்கள் ஆன்மிகப் பயணத்தில் வெற்றி கண்டவர்கள் பலருண்டு.

அவ்வகைப் படைப்புகளில் உள்ள கருத்தை, மிக எளிதாக அமைக்கப்பட்ட, எளிய பாடல் வடிவில் உள்ள சில அறிவுரைகள் வழியாகவும் ஸ்ரீரமணர் நமக்குத் தந்திருக்கிறார். அவ்வாறு அமைந்த, ’ஆன்ம வித்தை’, ’அப்பளப் பாட்டு’ என்ற இரண்டு பாடல்களில் முன்னதன் விளக்கத்தை இங்குப் பார்ப்போம். இப்பாடலின் மூல வடிவை, பகவான் ஸ்ரீரமணr எழுதிய வகையில் கீழே தந்துள்ளேன். பாடலின் இறுதியில், பகவானின் நெருங்கிய சீடரான முருகனாரின் மறைவு பற்றிய குறிப்பையும் காணலாம். 


ஆன்மவித்தை

பல்லவி:

ஐயே! யதிசுலபம்- ஆன்மவித்தை
ஐயே! யதிசுலபம்.

அநுபல்லவி:

நொய்யார் தமக்குமுளங் கையா மலகக்கனி
பொய்யா யொழியமிகு மெய்யா யுளதான்மா (ஐயே!)

சரணங்கள்:

சரணம் 1

மெய்யாய் நிரந்தரந்தா னையா திருந்திடவும்
பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய்
மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே
மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா -
விளங்குமே; இருளடங்குமே; இடரொடுங்குமே;
இன்பம் பொங்குமே. . . . . . . (ஐயே!)

சரணம் 2

ஊனா ருடலிதுவே நானா மெனுநினைவே
நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா
னானா ரிடமெதென்றுட் போனானி னைவுகள்போய்
நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம -
ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
இன்பத் தானமே. . . . . . . (ஐயே!)

சரணம் 3

தன்னை யறிதலின்றிப் பின்னை யெதறிகிலென்?
றன்னை யறிந்திடிற்பின் னென்னை யுளதறிய?
பின்ன வுயிர்கல பின்ன விளக்கெனுமத்
தன்னைத் தனிலுணர மின்னுந் தனுளான்ம -
ப்ரகாசமே; அருள்வி லாசமே; அகவி நாசமே;
இன்பவி காசமே. . . . . . . (ஐயே!) 

சரணம் 4
 
கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழ
வெம்மார்க் கமதனினு மிம்மார்க் கமிக்கெளிது
சொன்மா னத்தனுவின் கன்மா திசிறிதின்றிச்
சும்மா வமர்ந்திருக்க வம்மா! வகத்திலான்ம -
சோதியே; நிதானு பூதியே; இராது பீதியே;
இன்பாம் போதியே. . . . . . . (ஐயே!)

சரணம் 5

விண்ணா தியவிளக்குங் கண்ணா தியபொறிக்குங்
கண்ணா மனக்கணுக்குங் கண்ணாய மனவிண்ணுக்கும்
விண்ணா யொருபொருள்வே றெண்ணா திருந்தபடி
யுண்ணா டுளத்தொளிரு மண்ணா மலையெனான்மா
காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
இன்பு தோணுமே. . . . . . . (ஐயே!)

                  --------------------------------

*பல்லவி, அநுபல்லவி பாடின பாரத்வாஜி, முகவைக்கண்ண முருகனார் பகவான் சரணங்களை வேண்டியடைந்தனர்.

-----------
 
மேலே தந்துள்ள பாடலின் மூல வடிவத்தில், பதங்களைத் தமிழிலக்கணப் புணர்ச்சி விதிப்படி சேர்த்து எழுதியிருப்பது ஸ்ரீரமணருக்குத் தமிழிலுள்ள தேர்ச்சியைக் காட்டுகிறது. தற்காலத்தில் இப்பாடலைப் படிப்பவர்கள் பொருளை எளிதில் புரிந்து கொள்ளுவதற்காக, அதன் பதம் பிரித்த வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. 

பல்லவி:

ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை
ஐயே! அதி சுலபம்

அனுபல்லவி:

நொய்யார் தமக்கும் உளங்கை ஆமலகக் கனி 
பொய்யாய் ஒழிய மிகு மெய்யாய் உளது ஆன்மா    (ஐயே!)

சரணம் 1

மெய்யாய் நிரந்தரம்தான் ஐயாது இருந்திடவும் 
பொய்யாம் உடம்பு உலகம் மெய்யா(ய்) முளைத்தெழும் பொய்-
மை ர் நினைவு அணுவும் உய்யாது ஒடுக்கிடவே
மெய் ஆர் இதயவெளி வெய்யோன் சுயம் ஆன்மா ---
விளங்குமே; இருள் அடங்குமே; இடர் ஒடுங்குமே;
இன்பம் பொங்குமே  (ஐயே!)

சரணம் 2

ன் ஆர் உடல் இதுவே நான் ஆம் எனு(ம்) நினைவே
நானா நினைவுகள் சேர்ஓர் நார்எனும் அதனால்
நான் ஆர்?இடம் எது? என்று உள்போனால், நினைவுகள் போய்
நான், நான்எனக் குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம --
ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;
இன்பத் தானமே .......... (ஐயே)   

சரணம் 3

தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகில் என்?
தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய?
பின்ன உயிர்களில்  அபின்ன விளக்கு எனும் அத்  
தன்னை த(ன்)னில் உணர மின்னும் த(ன்)னுள் ஆன்ம --
ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே;
இன்ப விகாசமே ...... (ஐயே)

சரணம் 4

கன்மாதி கட்டு அவிழ சென்மாதி நட்டம் எழ 
வெம் மார்க்கம் அதனினும் இம்மார்க்கம் மிக்கு எளிது  (வெம் மார்க்கம்= கடினமான பிற வழிகள்
சொல் மானத தனுவின் கன்மாதி சிறிது இன்றி
சும்மா அமர்ந்திருக்க அம்மா!அகத்தில் ஆன்ம ---
ஜோதியே; நித னுபூதியே; இராது பீதியே;
இன்ப அம்போதியே ....... (ஐயே) 

சரணம் 5

விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய பொறிக்கும்
கண்ணா(ம்) மனக்க(ண்)ணுக்கும் கண்ணாய் மன வி(ண்)ணுக்கும் 
விண்ணாய் ஒரு பொருள் வேறு எண்ணாது இருந்தபடி
உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா
காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
இன்பு தோணுமே .... (ஐயே)


தொடர்ந்து பகுதி  2-ல்.. 

1 comment:

  1. அட்டகாசம் அநந்த் ஸ்வாமி..
    ருசியாக உள்ளது படிக்க.. தொடர்க.. வாழ்த்து..
    வெப் சைட் மிக நன்று.நேர்த்தியும் கூட
    யோகியார்

    ReplyDelete